இந்நாட்டின் சுதந்திர அடிமைகள்!
>> Monday, August 6, 2012
ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம், தேவை! சொந்த வீடு இருப்பவர்களுக்குக் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் திருப்பூர், கோவை, சென்னை, போன்ற தொழில் நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை செய்து தனக்கானப் பிழைப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.
| சாமீய்! வாங்க சாமீய்! சாப்பிட்டு போலாம் வாங்க சாமீய்! |
இங்கு இவர்கள் வாடகை வீட்டில் சந்திக்கும் பலப் பிரச்சனைகள் வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு உள்ளது, வருடத்திற்கு ஒரு முறை வாடகை ஏற்றுவது, அநியாய கரண்டு பில் வசூல் செய்வது, மட்டுமில்லாமல் அதைச் செய், இதைச் செய், அங்க போகாதே! இங்கப் போகாதே! குழந்தைகள் சத்தம் போடாமல் இருக்க வேண்டும், விளையாடக் கூடாது, உறவினர்கள் வந்தால் ஒரு நாளுக்கு மேல் தங்கக் கூடாது! டிவிச் சத்தம் அதிகமாக வைக்கக் கூடாது என் பல சில கண்டிசன்களோடு ஒரு மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியதாக உள்ளது.
இந்த மாதிரி நகரங்களில் முக்கியமாக திருப்பூர்க்கு இடம் பெயரும்….வெளியூர் மக்களை மண்டைக் குடைச்சல் கொடுக்கும் விசயம் வாடகை வீடு! கிராமத்தில் பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கூட எளிமையாக….கர்வம் இல்லாமல் இருப்பான்! ஆனால் நகரத்தில் கோமணம் மாதிரி இடம் வைத்திருப்பவன் பண்ணுகின்ற அலம்பலும், அலப்பரையும் தாங்க முடிவதில்லை.
உதாரணத்திற்கு எனக்கு நடந்த ஒரு சம்பவம்! ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த போது புதிதாக பைக் வாங்கினேன், நூறு ரூபாய் வாடகை ஏறிவிட்டது. வேலைக்கு போயிட்டு இருந்த நான் சுயமாக தொழில் தொடங்கினேன், இருநூறு வாடகை ஏறிவிட்டது. கார் வாங்கினேன் வாடகை கணிசமாக ஏறியதில்லாமல்…வசையும் வேறு! வெளியூர்காரன் இங்கு முன்னேறக் கூடாது "போடா நீயும் உன் வீடும்" என்று காலி செய்து வந்துவிட்டேன்! இதுவே வெளியூர்காரன் தன் சாதியை சேர்ந்தவன் என்றால் இந்த தொந்தரவுகள் கிடையாது, வீடு விடும்போதே நம் சாதியை கண்டுபிடிக்க பல கேள்விகளை கேட்பார்கள்! நான் ஒரு முறை சிந்திப்பது உண்டு நாம் தலித் என்றால் வீடு கொடுப்பார்களா என்று? அதற்கான விடை ஒரு நண்பர் மூலம் கிடைத்தது!
![]() |
| ஊசி..பாசி...வித்தாலும் யார் காசுக்கும் ஆசைப்படமாட்டோம் சாமீய்! |
என் நண்பர் ஒருவர் தலித் பெண்ணை காதலித்து திருமணம் முடித்தார், அவர் இங்கு திருப்பூரில் நல்ல பணியில் இருந்தார், அவர் ஒரு உயர் சாதியினரின் வீட்டில் குடியிருந்தார், எப்படியோ வீட்டு சொந்தக்காரருக்கு இந்த உண்மை தெரிய வந்த போது வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டார், அவரே காலி செய்துவிட்டு ஓடும்படி அவர்களின் செயல்கள் இருந்தது. இவர்களைப் போன்றவர்களிடம் வெளியூர்காரர்களும், பிறசாதியினரும் இருப்பது நரகத்தில் இருப்பதுக்குச் சமம்!
நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்த போது, பேருந்து பழுதடைந்து நின்று விட்டது, நின்று கொண்டிருந்தோம். சாலையோரத்தில் ஒரு டென்ட் அடித்து நரிக்குறவக் குடும்பங்கள் சில இருந்தது, அதில் ஒரு டென்ட்டை கவனித்த போது சுவாரஸ்யமாக இருந்தது, ஒரு நரிக்குறவன் அந்த டென்ட்டுக்குள் அழுக்கு மூட்டையின் மீது தலை வைத்து அருகில் ஒரு டிரான்ஸ்சிஸ்டரில் மிக சத்தமாக எம்.ஜி.ஆரின் காதல் பாடலை கண்ணை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தான், ஓரத்தில் அவன் விற்பனை செய்யும் ஊசி, பாசிகள் கிடந்தன, ஒரு சிறிய டிவியும், பேட்டரியும் இருந்தது.
![]() |
| நம்ம பேமிலி போட்டா சாமீய்! |
வெளியே அவன் மனைவி மூன்று கல்லைக் கூட்டி காடையோ, கவுதாரியோ, கறிக்குழம்பு வேகவைத்துக் கொண்டிருந்தாள், சில சமயம் காகமாகக் கூட இருக்கலாம்!? அவன் போட்டிருந்த பச்சை நிற டிராயரின் பாக்கெட்டில் ஒரு மதுப்புட்டி தலைகாட்டியபடி இருந்தது!
கொஞ்சம் நிதானமில்லாமல் தூக்கத்தில் விழித்து எழுந்து நின்று விட்டால் அவன் மொத்தக் குடிசையும் கலைந்து விடும் மண்டியிட்டபடிதான் அவன் அரண்மனைக்குள் நுழைய முடியும் அப்படிப்பட்ட இடத்தில் அவன் தன் சுதந்திரத்தை எவ்வளவு அழகாக அனுபவிக்கிறான். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கின்றது, நாலாயிரம், ஐயாயிரம் என வாடகை கொடுத்து நாம் வாழ்ந்தாலும் சுதந்திர அடிமைகள் நாம் என்பது உண்மைதானே…!


