நான் குயில் பேசுகின்றேன்.....!
>> Monday, December 10, 2012
மனிதன் காது குடைய
இறகு கேட்ட போதே
எங்களினம் எச்சரிக்கை
அடைந்திருக்க வேண்டும்.
அப்படி இல்லாததால்.....
பெட்ரோல் புகை,
டீசல் புகை,
ஆலைப்புகை - என
சுவாசித்து.....சுவாசித்து....!
தொண்டை கமறுகின்றது
“இனிய சங்கீதம்”
அபஸ்வரமாய் ஒலிக்கின்றது!
உங்கள் அலைபேசியில்
என் குரலை ரிங் டோனாக
வைத்துக் கொண்டே
நாங்கள் வாழ்ந்த மரங்களை
வெட்டி காங்ரீட் கட்டிடங்களை
எழுப்பிக் கொண்டீர்கள்!
என் காதலன் நீங்கள்
காடழித்து உருவாக்கிய
சாலையில் வேகமாக வந்த
லாரியின் சக்கரத்தில்
கூழாகுவதற்கு - முந்திய
அலறல்அடிக்கடி
ஞாபகம் வருவதால்
என் பாடலில் முகாரி மட்டுமே
இசைக்கின்றது....!
ஒரு கிறுக்கு முண்டாசு
கவிஞன் எங்களைப் பாடிவிட்டு
போய்விட்டான்.....!
அவனையும் மதிக்க வில்லை
எங்களையும் மதிக்க வில்லை
வாழ்க சனநாயகம்!
சனங்கள் நீங்கள்
ஆலைக்கழிவு,
அனுக்கழிவு எனக் கொட்டி
நோய்களை நீங்கள்
பெற்றுக் கொண்டீர்கள் சரி
உங்கள் தொகுதியில் இல்லாத
ஓட்டும் இல்லாத
எங்களுக்கும் இலவசமாக
தந்து மொத்தச் சிறகையும்
பிடுங்கிக் கொண்டீர்கள்...!
உங்களுக்கு நேரமிருந்தால்
உங்கள் வீட்டருகில்
மரம் என்று ஒன்றிருந்தால்
நானிருப்பேன் கூவுகின்றேன்
கேளுங்கள் காது கொடுத்து
கேளுங்கள் இனிய கானமல்ல அது
உங்களுக்கு வரப்போகும்
ஆபத்துக்கான
“அபாயச்சங்கு”
