அங்கே நூத்தம்பது ரூபாய் அதிகச்சம்பளம்...!

>> Tuesday, May 21, 2013


"நூத்தம்பது ரூபாய் சம்பளம் அதிகம்ங்கறதுக்காக....இந்த கடைக்கு வேலைக்கு வந்தது தப்பாப் போச்சு..!" என்று சோமு நினைத்தான் "இப்ப நெனைச்சு என்ன பண்ணறது இம்மாம் பெரிய திருப்பூர்ல வேற கடை கெடைக்கலையா எனக்கு!" என்னடா புலம்புற என்றான் பக்கத்தில் இருந்த குண்டன் சரக்கு வாசம் அவனிடம் அதிகமாக வீசியது கண்கள் இரத்த நிறத்தில் இருந்தது. "வண்ணாரத் தாயே இவனுககிட்ட இருந்து என்னை உசிரோட காப்பாத்து ஆத்தா" என்று மனம் வேண்டியது.

சோமு ஒரு நூல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான், வாரச்சம்பளம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கு வரும் ஒரு ஆள் வேறு இடத்தில் வேலை வாங்கித்தருவதாக நூத்தம்பது ரூபாய் அதிகம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை காட்டவும், தினம் சத்தியமங்கலம் போக வர பஸ் செலவுக்கு ஆச்சுன்னு இந்த வாரம் திங்கக்கிழமையில் இருந்து புதிய கடைக்கு வேலைக்கு வந்தான்.

பழைய கடை போல் இல்லாமல் கண்ணாடி போட்டு மறைச்சு குளுகுளுன்னு ஏசிபூசின்னு கடை இருந்தது வயசுப்புள்ளைகளும் நல்ல செவத்த புள்ளைக நாலஞ்சு வேற இருந்தது. என்னமோ சொர்க்கம் மாதிரி இருந்தது சோமுவுக்கு, பிஸ்கட்டு, டீ, போண்டா, வடைன்னு கவனிப்பு வேற, பழைய கடையில வயசாளி செட்டியாரு பத்து பைசா செலவு பண்ண மாட்டாரு. ஆனால் இங்க ஓனர் கார்த்திக் சின்னப்பையன் ஹீரோ கணக்கா இருந்தாரு. சாயங்காலம் ஆறுமணிக்கு கார்த்திக் பிரண்டுக நாலஞ்சு பேரு வந்து ஒரே கும்மாளமா பேசிக்கிட்டு இருந்தாங்க அவங்க பேச்ச அரசல்புரசலா கேட்டதுல கார்த்திக் அந்த வழியா போகின்ற ஒரு டீச்சரை காதலிக்கின்றான் என்று தெரிந்தது. ஒரு நாளைக்கு அந்த டீச்சர் புள்ளைய பாக்கோணும் என்று சோமு நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது, கொரியர் அனுப்பிட்டு திரும்பி வரும் போது, சந்துல இரண்டு பேரும் பேசிட்டு இருந்ததைப் பார்த்தான் புள்ள நல்லா செவப்பா இலட்சணமா இருந்திச்சு, கார்த்திக்கு ஏத்த ஜோடிதான்னு சோமு நினைத்துக் கொண்டான்.

எதிர்பாராத ஒரு நாள் அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டான் கார்த்திக். அந்த புள்ள ரொம்ப பணக்கார வூட்டுப் புள்ள போல....சாதியும் வேற! இரண்டு அம்பாசிடர் கார்ல குண்டுகுண்டா ரவுடிகளை ஏத்திக்கிட்டு வந்த அந்தப்புள்ளையோட அண்ணங்காரன். விசயம் தெரியாம கடைக்கு ஏதோச்சையா வந்த கார்த்திக் பிரண்டு லட்சு என்கின்ற லட்சுமணனை எங்க போயிருக்காங்க என்று கேட்டு பின்னி பெடலெடுக்கறாங்க...அவன் அடிதாங்க முடியாம சோமுக்கு தெரியும்ன்னு உளற...சோமுவுக்கு ஏழ்ரை ஸ்டார்ட் ஆச்சு இரண்டு பேர் சோமுவைப் பிடித்துக் கொள்ள ஒரு வயசான ரவுடி ரொம்ப ஒல்லியா இருந்தான் அவன்தான் தலைவன் போல....புல் மப்புல நிக்கமுடியாம இருந்தான்.

"யார்ரா...இவன்? கரிச்சட்டிக்கு காட்டன் சட்டை போட்ட மாதிரி...! இரண்டு பேரும் எங்க ராஸ்கல் சொல்லு இல்ல மூக்குல குத்திருவேன்" என்ற படி கை ஆடி...ஆடி....சரியாக கண்ணைக் குத்தினான்.

"யோவ்...! நீ நல்லா இருப்பே கண்ணை கெடுத்திறாதைய்யா....! ஒண்ணு செய்யு கண்ணைக் குத்துறேன்னு சொல்லிட்டுக் குத்து அப்ப கரைக்ட்டா மூக்குல குத்துவே" என்றான் சோமு.

"ராஸ்கல் எகத்தாளமா.....என்றாலும் பெருசு சோமு சொல்லியபடி "கண்ணைக் குத்திருவேன் ஒழுக்கமாச் சொல்லு" என்று சரியாக வாயில் குத்தியது!

பாவம் சோமுவை அவங்கப்பன் முத்துச்சாமி கூட கை நீட்டி அடிச்சதில்லை.....! அடிக்கிற அளவுக்கு அதுவும் ஒர்த் இல்லை குடிச்சிட்டு ஊர்ல அப்பாவியா இருக்கிறவனா பாத்து ஒரண்டையிழுக்கும் அவனும் "யோவ்....!" அப்படின்னு எகிருனா "சார்..! நீங்க போங்க சார்...! அப்படின்னு பம்பும்...! 

ஒருத்தன் லட்சுவின் மூஞ்சியில் சிகரட்டை ஊதினான்....! "அண்ணே...! இந்த சரக்கு அவ்வளவு கிக் இல்லை இத ஏண்ணே குடிச்சே...?" என்று வாடையை வைத்தே சரக்கை  கண்டுபிடித்து அட்வைஸ் செய்தான். கடுப்பான அவன் இடுப்பைக் கிள்ளினான் சூழ்நிலை மறந்து அவன் கிள்ளியது கிச்சுகிச்சு மூட்டியது போல் இருக்க ஹ...ஹ.....ஹ....என்று சிரித்தான்! ஒரு அடி ஜம்ப் செய்து மண்டையில் நங்கென்று கொட்டு வைத்தான் அவன் லட்சு மிக கேவலமாக நாய் மாதிரி ஊளையிட்டான்.

சோமு பாத்தான் விட்டா இவனுக அடிச்சே ஒரு பக்க ஒரண்டைய கழட்டிடுவாணுக அப்படின்னு நினைச்சு பழனிக்கு போயிருக்காங்க.......என்றான். தூக்கி கார்ல போட்டுகிட்டு பழனி போறாங்க....! மணி எட்டு இருக்கும் லட்சுவையும், சோமுவையும் நடுவில் போட்டு இரண்டு புறமும் இரண்டு குண்டன்கள் உக்காந்து கொள்ள கார் கொடுவாய் தாண்டி போகுது, பழனியில யாரு வீட்டுக்குடா போறாங்க....என்று கேட்கறான் புள்ளையோட அண்ணன். கார்த்திக் ஒருமுறை நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது பழனியில் தன்கூடப் படிச்ச தன்ராஜ் இருப்பதாகவும் அந்த புள்ளைய கூட்டிட்டு ஓடுனா அங்கதான் போவேன்னு அரசல்புரசலா காதில் விழ சோமு அடியில் இருந்து தப்பிக்க சொல்லிவிட்டான். லட்சுவை தன்ராஜ் வீடு தெரியுமாடான்னு கேட்டதுக்கு தெரியும்ன்னு சொல்ல கார் பழனி நோக்கிப் பறந்தது.

நல்ல பனி காலம் வேற சரக்கு வேற ஓசிக்குடி குடிச்ச குண்டனுகளுக்கு ஒன்னுக்கு முட்டிக்கிட்டு வரவும், ஒரு இருட்டுக்குள்ள காரை நிறுத்தி ஒரு குண்டனை மட்டும் காவலுக்கு வச்சுட்டு ரோட்டோரம் ஒன்னுக்கடிச்சிட்டு இருந்தாணுக...சோந்து படுத்துகிட்டு இருந்த லட்சு பாத்தான் அந்த குண்டன் தம் அடிச்சிட்டு அசால்ட்டா நிக்கவும் காரை விட்டு இறங்கி அவன் உயிர்நாடியில் முட்டியை மடக்கு ஒரு உதைவிட அவன் 'ஹஸ்புக்' என்று வினோதமான ஒலியெழுப்பி கீழே விழுந்தான்.

கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒரே ஓட்டமா காட்டுக்குள்ள ஓடிப்போனான். சோமுக்கு கெதக்குன்னுச்சு அவன் கிடைக்கலைன்னா நம்மளை மறுபடியும் குமிய வச்சு கும்முவாணுக அப்படின்னு யோசனை பண்ணி அவன் ஓடிய எதிர் திசையில் காட்டுக்குள்ள ஓடினான். கொஞ்ச தூரம் வேகமா ஓடி ஒரு நல்ல புதர்க்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டான், அவங்களும் ரொம்ப நேரம் காட்டுகுள்ள தேடுனாங்க, சோமு பாங்காட்டு ஆசாமிங்கறதால நல்லா வங்குப்புதராப் பாத்து ஒளிஞசிக்கிட்டான், காருக்குள்ள இருக்கிற ஒரு சின்ன டார்ச்லைட் வச்சு தேடிப்பாத்தாங்க, அப்பவும் அகப்படலை...லட்சுவும் எங்க போனான்னு தெரியலை....விடிய...விடிய...அங்கியே கிடந்தான் சோமு. அவர்களும் தேடிதேடி வெறுத்துப் போயி திருப்பூர்க்கு திரும்பி போயிட்டாங்க...! ரோட்டுக்கு வந்து ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி லிப்ட் கேட்டான் சோமு. திருப்பூர் மார்க்கெட் போற ஆட்டோங்கறதால அதில் திருப்பூர் வந்து சேந்தான். பஸ் ஸ்டேன்ட்டில் கடை வச்சிருக்கும் ஊர்க்காரர் மாணிக்கத்திடம் கொஞ்சம் காசு வாங்கிட்டு ஊருக்குப் போனான்.

                                                                            ***

சோமு பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு திருப்பூர் வந்தான். இனி அங்க வேலைக்குப் போவக் கூடாது, சம்பள பாக்கி மட்டும் வாங்கிட்டு, வேற கடை பாக்கோணும், இல்ல செட்டியார்கிட்டியே மறுபடியும் போயிறணும். என்ற படி விடியக்காலையில் எழுந்து வந்திருந்தான்.

தூரத்தில் இருந்து பார்த்தான், கடை திறந்து இருந்தது, பிரச்சனையெல்லாம் ஓஞ்சு போச்சு போல..."வக்காலிக இவனுக சரக்குக்கு நம்மள ஊறுகா ஆக்கிட்டாங்க என்னா அடி....யம்மா! இன்னியோட இந்தக் கடை வாசல்ல தல வச்சுப் படுக்கக்கூடாது" என்று மனதில் நினைத்தபடி கடைக்குள் நுழைந்தான் இவன் தலயப் பாத்ததும் கார்த்திக் சிரித்தான், கொஞ்சம் வெளுத்து உடம்பு பூசியிருந்தது, பயபுள்ள நல்லா ஜாலியா இருந்திருப்பான் போல, நாமதான் மிதிபட்டோம் கடுப்புடன் சிரிக்கவில்லை சோமு.

"என்னண்ணா ரொம்ப அடிச்சிட்டாங்களா...? சாரிண்ணா....!" என்றான்.

"சரி...சரி...வுடுங்க....என் சம்பள..." பேசி முடிக்க வில்லை கார்த்திக், "கவிதா இங்க சீக்கிரம் வா...."!என்று அழைத்தான். "ஓ......அந்த டீச்சர் புள்ள இங்க கடையிலதான் இருக்கா...?" என்று நினைத்தான் சோமு அந்தப் புள்ள புதுசா மினுமினுக்கும் மஞ்சத்தாலியுடன் வந்து நின்றது இருவரும் ஜோடியாக காலில் விழுந்து  "வீட்டுக்கு நான் ஒரே பையன் என் அண்ணனா ஆசிர்வாதம் பண்ணங்கண்ணா" என்றான் கார்த்திக் சோமுவுக்கு என்னவோ போலாகிவிட்டது "நல்லாயிருங்க.....நல்லாயிருங்க..."என்றான் 

"சோமண்ணா மத்தியானம்  எங்க வூட்டுலதான் சாப்பாடு! ஓட்டலுக்கு போக வேண்டாம்" என்றார்கள். "சரி நீங்க கடைய பாத்துகங்க, நான் கவிதாவை வீட்டுல விட்டுட்டு வந்திடுறேன், பத்து நாளா நீங்க இல்லாம ஒரு வேலையும் ஆகலை" என்று சொல்லிவிட்டு பைக்கில் பறந்து போனார்கள். சோமு எதுவும் புரியாமல் கொஞ்ச நேரம் நின்று விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அவன் மனதில் வேலையை விட்டு நிற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.....!

4 comments:

சீனு 10:14:00 PM  

ஒரு பெரிய ட்விஸ்ட் எதிர்பார்த்தேன் இருந்தாலும் குடிகாரங்கள வச்சே கதைய நகத்தீட்டீங்க

திண்டுக்கல் தனபாலன் 12:45:00 AM  

கதையா...? இல்லை உண்மையில் நடந்த சம்பவம் மாதிரி தோன்றுகிறது...!

குட்டன்ஜி 3:52:00 AM  

இது ஒரு உண்மைச் சம்பவம்தானே!

தமிழ்வாசி பிரகாஷ் 10:08:00 AM  

ரசித்தேன்...

டெம்ப்ளேட் நல்லா இருக்கு.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP