ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - யதார்த்த சினிமா!

>> Friday, September 27, 2013


குத்துப்பாட்டு...மொக்க பேஸ்புக் காமடி என்று படம் எடுத்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்தில் முதல் படத்  தலைப்பிலேயே "சித்திரம் பேசுதடி" என்று இலக்கிய வாசனையுடனான தலைப்பை வைத்து "யாருடா இவன்...?" என்று தமிழ் சினிமா ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்தவர் மிஷ்கின்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...ஒரு நாவலாக இருக்க கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் உள்ளது. படம் பார்த்த உணர்வை விட ஒரு திரில்லர் நாவலைப் படித்த ஒரு உணர்வைத் தருகின்றது. குண்டடி பட்டுக் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவனை பலரும் கடந்து போக ஒரு மருத்துவ கல்லூரி மணவனான சந்துரு தூக்கிச் சென்று உயிர்காக்க போராடுகின்றார். தனியார் மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ள மறுக்கப்படுகின்றார். காவல் துறையும் சரியான நடவடிக்கை எடுக்காமல் உயிருக்குப் போராடுபவனின் கடிகாரத்தைக் கூட திருடுகின்றார்கள். சாதாரணமாக ஒரு அப்பாவியை நாம் தூக்கிக் கொண்டு சேர்த்தாலே நம்மீதே கொலைப் பழியைப் போடும் நாட்டில் அவன் ஒரு கிரிமினலாக........பதினான்கு கொலை செய்த சிபிசிஜடி போலீசாரால் சுடப்பட்ட ஒரு கிரிமினலாக இருந்தால் அவனும் அவனைச் சார்ந்த குடும்பமும் என்ன நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை முன் காட்சியில் யதார்த்தமாக மிஷ்கின் ஸ்டைலில் சொல்லியிருக்கின்றார். ஆட்டுக்குட்டி சந்துருவாக நடித்த ஸ்ரீ நன்றாக நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றார்.

ஓநாயாக எட்வின் என்று அழைக்கப்படுகின்ற WOLF என்று காவல் துறையால் விளிக்கப்படுகின்ற மிகமோசமான ஒரு கொலைகாரனாக மிஷ்கின். ஒரு இடத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருப்பான் ஒருவன். தன்னுடைய துப்பாக்கியை கிழே வைத்து அதை தள்ளிவிட்டு சிறிய ஒரு கத்தியை எடுத்துக் காட்டுவார். அடுத்த நொடியில் எதிராளியை அந்த கத்தி பதம் பார்த்து துப்பாக்கி ஓநாயின் கைக்கு வரும் கொஞ்சம் பழைய ரஜினி பட ஜெய்சங்கர் பட வகையாறா ஸ்டைலாக இருந்தாலும் எடுக்கப்பட்ட விதத்தில் அப்ளாஸ் அள்ளுகின்றது. ரயிலில் தப்பிச் செல்கின்ற காட்சியிலும். "மூணு என்றதுக்குள்ள துப்பாக்கிய கீழ போடு" என்கின்ற சந்துரு "ஒன்று" என்கின்றார்...."இரண்டு" என்று மிஷ்கினே சொல்லி பினைக்கைதியாக உள்ள பெண்மணியின் நெற்றியில் வைக்கும் காட்சியிலும், வித்தியாசமான சிந்தனையில் இயக்கியிருக்கின்றார். இந்த மாதிரி நுணுக்கமாக பல காட்சிகள் படம் முழுவதும் உள்ளது. விரிவாக இதை அலச ஒரு போஸ்ட் போதாது.

ஓநாய், ஓநாயை சுடத் துரத்தும் புலி போலீஸ், தன்னைத் தாக்கிய ஓநாயை கொல்லத் துடிக்கும் வில்லக் கரடி, தன்னால் பாதிக்கப்பட்ட கண்ணில்லாத ஆட்டுக்குட்டியை காக்கப் போராடும் ஓநாய், தன் குடும்பம் தப்பிக்க வேண்டுமானால் காவல் துறையால் ஓநாயைச் சுட சொல்லி நிர்பந்தப்படுத்தும் ஆட்டுக்குட்டி சந்துரு கிட்டதட்ட ஆடுபுலி ஆட்டம்தான். பரபரப்பான ஆடுபுலி ஆட்டம் அதிக இடங்களில் நம்மை சீட்டு நுனிக்கு அழைத்து வந்துவிடுகின்றது.

பெரிதாக ஒரு பிளாஷ் பேக் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆடியன்ஸை ஒரு கதை சொல்வதின் மூலமே புரியவைக்கும் உத்தி தமிழ் சினிமாவுக்கு புதிது. இதுவே சிலருக்கு குறையாகக் கூடத் தெரியலாம் அது அவரவர் ரசனையைப் பொருத்து இருக்கின்றது. 

இளையராஜாவின் பின்னணியிசை யாராலும் மிஞ்ச முடியாது ரசிகனின் இதயதுடிப்பை இசையால் மீட்டுகின்ற வித்தை மொட்டையால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய சொத்து இந்த மாபெரும் இசைக்கலைஞன். ஒளிப்பட கலைஞரும் மிகவும் உழைத்திருக்கின்றார் படம் ஓர் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் படம் முழுவதும் இரவு காட்சிகளாகவே வருகின்றது பல நாள் தூக்கத்தை துறந்திருப்பார்கள்.

சிபிசிஜடி அதிகாரி புலியாக வரும் "ஷாஜி" அஞ்சாதே பொன்வண்ணனை அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும். நன்றாக நடித்திருக்கின்றார். பாராட்டும் விதமாக இருக்கின்றது. அடிக்குரலில் இயலாமையால் கமிஷனரிடம் ஆவேசப்படும் இடங்களில் 'அட' போட வைக்கின்றார்... ஆனாலும்... ஓவராக 'செக்ஷன்' எல்லாம் சொல்லி பேசுவது புரியவில்லை என்றாலும் வழக்கமான பட வசனங்கள் போல் ஆகிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது.

தற்போதைய தமிழ் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகள் வெற்றியடைந்து வருவது வரவேற்க்கப்பட வேண்டிய விசயமாக இருப்பினும். நமது ரசிகர்கள் அந்நிலைக்கு பக்குவப்பட்டுவிட்டானா எனில் இல்லை என்றுதான் சொல்லமுடியும். தங்க மீன்கள் கூட சிலரால் மட்டுமே ரசிக்கப்பட்டது. பலரால் ஓரம் கட்டப்பட்டது. கமர்சியல் விசயங்கள் இல்லாத யதார்த்த திரைப்படங்கள் நம்முடைய பின்வரும் சந்ததிகளுக்கு வியப்பை அளிப்பனவாக வேண்டுமானால் இருக்கலாம் வயிற்றை நிரப்புமா என்பது சந்தேகமே! மிஷ்கின் போன்றவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றது. கொரிய படத்தை காப்பியடித்தார் என்பன போல இருந்தாலும் நான் விரும்பக்கூடிய இயக்குனர்களில் அவரும் ஒருவர். படம் எனக்கு பிடிச்சிருக்கு...உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நம்புகின்றேன்.

Read more...

ஊசி ஒடைஞ்சு போச்சு….!

>> Monday, September 23, 2013


செல்வம் டிவிஎஸ்ஐ நிறுத்திவிட்டு…கம்பனிக்குள் நுழையும் போதே ஓனர் சாமி படத்துக்கு ஊதுபத்தியை காட்டிக்கொண்டிருந்தார். செல்வம் வந்ததைக் கூட கவனிக்காமல் கண்ணை மூடி பிராத்தனையில் இருந்தார். "பண்றதெல்லாம் மொள்ளமாரித்தனம் காலையில பக்தி பரவசம்" என்று முனகி விட்டு கம்பனிக்கு உள்ளே நுழைந்தான்.

சிங்கர் டைலர் பொன்ராசு மிசினை துடைத்துக் கொண்டே "என்னடா செலுவு பிக்காளித்தனமான வேலைக்கு செக்கிலுத்த செம்மல் மாதிரி வெரைப்பா வர்ற…"  என்றான்.

"யோவ் பொன்சு…! உன்ற எகனை மொகனைக்கு ஒண்ணும் கொரைச்சல் கெடையாது…தெச்ச ஜட்டியெல்லாம் தூல் பிரியுதாம்…கம்பனி மேனஜர் கெட்ட வார்த்தையில திட்டுறான்."

"மிசினாடா இது..? லச்சுமி நகர்ல கூட வாங்க மாட்டான், தூக்கியெறிஞ்சிட்டு நல்ல மிசினு வாங்கச் சொல்லு ஒங்க ஓனர…..வெங்காயம்"

"ஆமா இப்பவே போன வாரச் சம்பளத்துக்கு வாங்குன வாரவட்டி குடுக்க முடியாம…கந்து வட்டிக்காரன் திட்டிட்டு போறான். புது மிசினுக்கு எங்க போவாரு... நீ ஒழுக்கமா வேலையப் பாருய்யா....!அறுக்கமாட்டாதவ அறுவா மொண்ணைனானம்"

"தங்கமணிகிட்ட கொடுத்த காச சேத்தி வச்சிருந்தாக் கூட இன்னும் இரண்டு கம்பனி வச்சிருக்கலாம்...உங்க ஓனரு.....!"

"அவரும் என்னய்யா பண்ணுவாரு...முப்பத்தெட்டு வயசாகுது இன்னும் கண்ணாலமில்ல...புழங்க ஆள் வேணுமில்ல...."

"டேய் செலுவா...!" என்று ஓனர் பழனிச்சாமி சத்தம் கேட்க அவரின் அறையை நோக்கி ஓடினான். 

"ஏண்டா செலுவா நைட்டு தெச்ச பீஸ கொண்டு போய் குடுக்காம பொன்ராசுகிட்ட என்னடா ஞாயம் மேனஜர் கூப்பிட்டு சத்தம் போடறான்டா...போடா சீக்கிரம்."

"இதோ போறங்க....!"

"ஆமான்டா...வெளிய ஒரு பல்சரு வண்டி நிக்குதே ஆருது..?"

"அது அந்த புதுசா வேலைக்கு வந்திருக்கிற தினேஷ் பையனுது"

"பார்ரா...! கைமடி கூட பல்சரு பைக்குல வர்றான் நானு ஓட்டை டிவிஸ்ச மாத்த முடியல...."

"நீங்க தங்கமணிய விட்டுட்டு சீக்கிரம் கண்ணாலம் மூய்ங்க....ஹோண்டா சிட்டி காரே வாங்கலாம்....."

"உள்ளூர்காரன்....சொந்தக்காரன்னு எடம் குடுத்தா....ஓவரா பேசுடா நீ...!" 

"உண்மைய சொன்னா கோவம் வரும் உங்களுக்கு. என்ன பண்றது எனக்கு நாலு வாரம் சம்பளம் பாக்கி...!"

"செரி...காலையில டென்சன் பண்ணாதே...! கம்பனிக்குப் போயிட்டு சீக்கிரம் வா...! வேற பக்கம் போகணும் தங்கமணி வந்திருச்சா...?"

"இன்னும் வர்லைங்க...ஆனா எல்லா செக்கிங்கு பொம்பளைகளும் வந்துட்டாங்க...!"

"கொப்பனோலி மூணு நாளு லீவு போட்டுட்டா பாரு... இவளை மொதல்ல வளைச்சு முடுக்கணும்டா....!"

"முடிக்கிட்டாலும்....." என்று மனதில் நினைத்தபடி 
பதில் எதுவும் சொல்லாமல் செல்வம் அவரின் அறையை விட்டு வெளியேறி கம்பனிக்கு உள்ளே சென்று தைத்து வைத்திருந்த ஜட்டி மூட்டையை டிவிஎஸ்சின் முன்னால் வைத்துக் கொண்டு முகம் மட்டும் தெரிய ஒரு பூதம் மாதிரி சாலையில் வேகமாக போனான்.

---

அவன் போன சிறிது நேரத்தில் ஓட்டமும் நடையுமாக தங்கமணி வர, அறைக்குள் இருந்த பழனிச்சாமி கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்து விட்டான் "லேய் இங்க வாடி" என்றான்.

"என்னங்க...!"

"எத்தனை மணிக்கு வர்ற மணி ஒம்பதாச்சு இதான் வேலைக்கு வர்ற நேரமா...? ரொம்ப ஏத்தமிடி ஒனக்கு! மூணுநாளு புடுங்குனுது பத்தாதா..?"

"ஊருக்கு போயிருந்தனுங்க...வந்ததும்மே நேர கம்பேனிக்கு வர்றேன் வையறீங்க...!"

"செரி...செரி....உள்ள போகாத... என்ற ரூம்மு கூட்டாம...புடிக்காம...கெடக்கு போயி சுத்தம் பண்ணிடு, சோறாக்கிட்டேன் கொழம்பு எதாவது வச்சுட்டு அப்புறம் வேலையப் பாரு போ...!"

போன் டி.எம்.எஸ் பாடிய முருகன் பாடலை ரிங்டோனாய் ஒலிக்க... ரூம் சாவியை அவளிடம் தூக்கி வீசி சைகையால் போகச் சொன்னான்.

"அலோ சொல்லும்மா...!"

"..................................................................."


"என்னது ஜாதகம் பொறுந்தலையாமா...?"

"..................................................................."

"செரி...வுடு...அழுவாதே.....அமையும் போது அமையும்...! நம்ம கையில என்ன இருக்கு..?"

"....................................................................."

"ம்ம்ம்....வேலை நடக்குது, நானு இந்த வாரம் ஊருக்கு வர்றேன் நைய்நைய்ங்காதே போனை வைய்யி...வேலை இருக்கு...!" 

போனை வைத்து விட்டு கம்பனிக்கு பின்னால் இருந்த அவன் தங்கும் சின்ன ரூமுக்குப் போனான்.தங்கமணி தரையைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கதவைச் சாத்தினான்.

---

கட்டைக் கொண்டு சென்று கம்பனியில் போட்டுவிட்டு திரும்ப செக்ஷனுக்கு வந்த செல்வம் கம்பனிக்கு முன்னால் பொன்ராசு பீடி குடித்துக் கொண்டு நின்றிருந்தான்...டிவிஎஸ்சை நிறுத்திக் கொண்டே கேட்டான்.

"யோவ்...! "பொன்சு" ஏய்யா இங்க நிக்கற...? நீ உருப்பிடியா ஒரு நாளைக்காச்சும் வேல பாக்குறீயா...?"

"டேய்...! வௌக்கெண்ணை....ஊசி ஒடைஞ்சிருச்சுடா....! நீயும் இல்ல என்ன பண்றது"

"ஏன்...! ஓனர் இருக்காருல்ல... அவருகிட்ட கேட்க வேண்டியதுதானே...?"

"யாரு...? ஒங்க ஓனரா.....திங்கக்கெழமை காலையிலியே வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காரு....மூணு நாளு ஏக்கம் பாரு செத்த நேரமாகும்....!"

"தங்கமணி வந்துட்டாளா...?"

"ஓ....அம்மணி ஒம்பது மணிக்கு ஆடி அசைஞ்சு வர்றா! அப்படியே மறைச்சு ஒதுங்கிட்டான்யா உங்க ஓனரு...!"

"கருமம் வாய்யா, ஊசிய எடுத்து தர்றேன்! தெச்சுத் தொலை...! அந்த மேனேஜரு தேவடியாப்பைய கெட்டவார்த்தையில சத்தம் போடுறான். இந்தாளு பாட்டுக்கு எனக்கென்னேன்னு காலையில கையில புடிச்சுட்டு ரூமுக்குள்ள போயிட்டான்...ச்சை என்ன பொழப்பு நாலு வாரம் சம்பளம் வேற வரணும் இல்லான்னாக் கோட வுட்டுப் போட்டு இப்படியே போயிருவேன்." புலம்பிய படி செல்வம் மேஜையைத் திறந்து ஊசி எடுத்துக் கொடுக்க....! பொன்ராசு நக்கல் சிரிப்புடன் "சீக்கிரம் உங்க ஓனர் சோத்துப் போசிய தூக்கிட்டு மறுபடியும் டைலாக்ஸ் கம்பனிக்கு வேலைக்கு போவாரு...கூடிய சீக்கிரம் நடக்கும் பாரு...!" என்றான்.

"போய்யா....போய் வேலையப் பாரு உன்ன மாதிரி ஆளுகளை வச்சா வேலைக்கு என்ன..? பிச்சைதான் எடுக்கனும்"

"ஓனரை உட்டுக்குடுக்க மாட்ட....ஆனா உன்ற லவ்வரு தங்கமணிய உட்டுக் குடுப்பே" என்று சிரித்தான் பொன்ராசு.

"போய்யா...பழச கௌறாத...அவள மறந்து பல நாளாச்சு....! லட்டர் குடுத்ததுக்கு என்னிக்கு மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசுனாளோ...அன்னிக்கே மறந்துட்டேன். ஒன் சைட் லவ்வு அது"

"வயசுப் பைய உன்னை வுட்டுட்டு....அரைக் கெழவன் பழனிச்சாமி கோட பகல்லியே படுத்துக் கெடக்கறா பாரு....!"

"யோவ்...பொன்சு போய்யா வேலையைப் பாரு...போ....காலையில மனுசனை டென்சன் பண்ணிட்டு.....எவ எப்படிப் போனா என்ன....?" என்று செல்வம் கத்த பொன்ராசு அமைதியாக மிசினை நோக்கிப் போனான். 

செக்கிங் பெண்கள் பேசிச்சிரித்துக் கொண்டிருக்க..."ஏம்மா...வேல பாக்க வந்தீங்களா...? கும்மாளமடிக்க வந்தீங்களா...? சும்மா பீஸை நீவிக்கிட்டே நில்லுங்க....புதுசா வயசுக்கு வந்தவளுக மாதிரி சீக்கிரம் முடிங்க...ஓவர் லாக் டைலர் அளவு பாத்து புடிங்க கன்னாபின்னான்னு புடிக்காதிங்க....நான் வார்த்தை வாங்க வேண்டியதா இருக்கு...!"

செல்வம் உட்ச பட்ச வெறியில் எல்லாரையும் திட்டிக் கொண்டிருந்தான் நீண்ட நேரமாக......

Read more...

பங்களாப்புதூர் ஸ்கூல் பத்து கிலோமீட்டர்....!

>> Saturday, September 14, 2013

காதல் என்பதை பருவ வயதில்தான் நாம் உணர்கின்றோம் அதற்கு முன் பால்யத்தில் அது காதல் என்று சொல்லமுடியாது ஒருவகையான ஈர்ப்பு எனலாம். அன்பு நிறைந்த ஒரு வகையான புரிதலற்ற காலமது. அந்த வயதில் என் வீட்டுக்கு அருகில் சாமிநாதன் என்பவர் சைக்கிள் கடை வைத்திருந்தார். அவர் மனைவி மக்களுடன் இருந்தாலும் சத்தியமங்கலத்தில் ஒரு விதவைப் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார். அடிக்கடி அங்கே போய் வருவார் சில நாட்கள் வேலை அதிகமாக இவர் ஒரு மாதமாக அங்கு போகவில்லை அந்த விதவைப் பெண் தன் ஒரே மகளைக் கூட்டிக் கொண்டு சைக்கிள் கடையில் வந்து உக்கார்ந்து கொண்டது. அவரும் பல சமாதானங்களைச் செய்தும் அப்பெண் மசியவில்லை.

யாரோ சென்று அவர் மனைவியிடம் சொல்ல... சரியான சண்டை ஊரே கூடிவிட்டது. ஊர் பெரிசுகள் கூடி விடிய...விடிய...பஞ்சாயத்து நடந்தது அந்த விதவைப் பெண் இவருடன் இதே ஊரில்தான் இருப்பேன் இல்லை பவானி ஆற்றில் விழுந்து நானும் என் குழந்தையும் இறந்து விடுவோம் எனக் பிடிவாதமாக இருக்க...ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து கடைக்கு அருகில் ஒரு வீட்டைப்பார்த்து சைக்கிள் கடைக்காரர் விதவைப் பெண்ணை குடிவைத்து விட்டனர்.

அந்த விதவைப் பெண்ணின் மகள் பெயர்தான் "சுதா" சுதா சும்மா சொல்லக்கூடாது நல்ல கேரளாப் பொண்ணு மாதிரி நல்ல அழகு. சத்தியில் இருந்து டி.சி வாங்கிக் கொண்டு வந்து எங்க ஊர்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள், எங்கள் வகுப்பில் இடமிருக்க அங்கு உக்கார வைக்கப்பட்டாள். வௌக்கெண்ணெய் முகங்களாக பார்த்த எங்களுக்கு பான்ட்ஸ் பவுடர் வாசமும், சாயம் போகாத பூப் போட்ட பாவாடை சட்டையும் வெள்ளைவெளேரென்ற காலில் அணிந்திருக்கும் கால் கொலுசும் ஒரு மாதிரியான கிறக்கத்தை உண்டாக்கின. அவளைப் பற்றி பல கிசுகிசுக்கள் பசங்க மத்தியில் புழங்க ஆரம்பித்தது.

ஊருக்குள் சுதாவின் அம்மாவைப் பற்றிய செய்திகள் நல்லவிதமானதானதாக இல்லை. அவள் ஒரு மாதிரி என்கின்ற ரீதியில் பல கதைகள் உலாவந்தன சில இளைஞர்கள் சைக்கிள் கடைக்காரர் இல்லாத போது அவள் வீட்டுக்குப் போவதாகவும், ஊருக்குள் நிறைய நபர்களை வளைத்துப் போட்டிருப்பதாகவும் பக்கத்து வீட்டு அக்காக்கள் நாங்கள் சிறுவர்கள் என்பதால் தைரியமாக பேசிக்கொண்டிருப்பார்கள். அன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சி என்பது நுழையவில்லை அதனால் பெண்களின் பொழுதுபோக்கே இது போன்ற பொரணிகள்தான். அவர்கள் பேசுவதை விளையாடுவது போன்று பாசாங்கு செய்து கொண்டே கேட்டு கொண்டு வகுப்பறையில் நாங்க கூடிப் பேசுவோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சுதா என் வீட்டுக்கு வர ஆரம்பித்தாள்...காலாண்டுக்குப் பிறகுதான் இந்தப் பள்ளியில் சேர்ந்ததால் எழுதாத பாடங்களை என் நோட்டை வாங்கி எழுத ஆரம்பிக்க மிக இயல்பாய் அவள் பேச ஆரம்பித்தாள். அவள் வருவதை என் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது கரித்துக் கரித்து கொட்டிக் கொண்டிருப்பாள்.

"ஏண்டி நீ பள்ளிக் கூடத்துல எழுதுவியா மாட்டியா...?" என்று காரணமில்லாமல் கோபப்படுவாள் எனக்கு சங்கடமாக இருக்கும் ஆனால் சுதா ஒரு துளி முகம் சுருங்காமல் மென்மையாக "இல்ல அத்தை நான் பாதியில் தான் சேந்தனா அதனால எழுதலை" என்று விளக்கமளிப்பாள்.

நானும் வகுப்பறையில் அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன். காரணம் ஒரு பெண்ணிடம் பேசினாலே பல கதைகள் கட்டி விடுவார்கள். ஆனாலும் என் பக்கத்துவீட்டுப் பையன் ஒருவன் அவள் அடிக்கடி என் வீட்டுக்கு வருவதையும்...நான் அவளுடன் பேசுவதையும்...ஒன்றாகப் படிப்பதையும் போட்டுக் கொடுத்து விட்டான். அவளுடைய ரெக்கார்டு நோட்டில் நான் வரைந்து கொடுத்த படங்களைக் காட்டி நாம கேட்டா வரைஞ்சு கொடுக்கமாட்டிங்கறான் அவளுக்குப் பாரு எப்படி டிசைன் டிசைன்னா வரைஞ்சு கொடுக்கறான் என்று பெரிய களோபரம் ஆகவும். நான் மிகவும் பயந்து போனேன் பள்ளியெல்லாம் தெரிந்து அம்மா அப்பாவுக்கெல்லாம் தெரிந்து அவள் கழுத்தில் நான் தாலி கட்டுவது போல எல்லாம் கனவு வேறு வந்து தொலைத்தது அவளை கொஞ்சம்...கொஞ்சமாக உதாசினப்படுத்த ஆரம்பித்தேன்.

நான் விலகி போவதை உணர்ந்த அவள் ஒரு நாள் நேரடியாகவே கேட்டாள் "ஏன்...? நான் வந்தா பேச மாட்டிங்கற நான் என்ன தப்புச் செஞ்சேன்" என்று குழந்தைத்தனமாக கேட்டாள். நான் சமாளித்தாலும் அவளை முழுவதுமாக விலக்க முடியவில்லை..நட்பு தொடர்ந்தது. என் நண்பர்கள் கொஞ்ச நாள் புரளி பேசியவர்கள் பிறகு ஒரு ஆசிரியை புதிதாக எங்கள் பள்ளியில் சேர அவருக்கும் கணக்கு வாத்தியாருக்கும் "லவ்ஸ்" ஏற்பட அதைப் பற்றி பேச ஆரம்பித்து எங்களைப் பற்றி மறந்து போனார்கள்.

பத்தாவது முடிந்தவுடன் நானும் வேறு பள்ளிக்குச் செல்ல... அவள் வேறு பள்ளிக்குச் செல்ல...பிறகு வேலை என்று காலங்கள் உருண்டோட அவளைப் பற்றி மறந்த ஒரு சூழ்நிலையில்தான் ஒருநாள் நான்வேலை முடிந்து வந்து சாப்பிட உக்கார அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சுதாவைப் பற்றி. பத்தாவது பெயில் ஆக அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு தையல் கற்றுக் கொள்ள போய்க் கொண்டிருந்த இடத்தில் எவனோயோ...! டைலரை காதலித்தததாகவும் அவன் அவளை கர்ப்பமாக்கி விட்டு திருப்பூர் ஓடிவிட்டானாம்...அவள் அம்மா ஏதோ மருத்துவச்சியை வைத்து கலைத்துவிட்டாளாம். அதன் பிறகு ஏதேச்சையாக நான் வீட்டிலிருக்கும் சமயம் "அத்தை கொஞ்சம் குழம்பு குடுங்க...கடுகு கொடுங்க" என்று வருவாள்...என்னைப் பார்த்தாள் என்றால் சிநேகமாக சிரித்து "நல்லாருக்கியா" என்பாள்..."படிக்க எதாவது கதை புக்கு கொடேன்" என்பாள். நானும் எதாவது புத்தகத்தைக் கொடுத்து விட்டு சிரிப்பேன். அதன் பிறகு அம்மா என் மேல் எரிந்து...எரிந்து விழுவாள் அவள் என்னை மயக்கி விடுவாள் என்று அம்மா கூட நினைக்கிறாளா...? என்று வேதனையாக இருக்கும்.

நீண்ட நாள் வேலையாக தொடர்ந்து வெளியூரில் இருந்த நான் ஆறு ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு வந்தேன் குளித்துவிட்டு அப்படியே கோயில் வரை போனேன். திரும்பி வந்த போது சைக்கிள் கடையில் சாமிநாதன் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தார்...சுதாவின் அம்மா கடையில் உக்காந்து வேஸ்ட் பனியன் துணியை பிரித்துக் கொண்டிருந்தாள்...சுதாவை காணவில்லை. கல்யாணம் ஆகியிருக்குமோ...? என்று யோசனை செய்தபடியே வந்தேன்.

வீட்டுக்கு வந்த பிறகு அம்மா சாப்பாடு போட சாப்பாட்டைப் பிசைந்து கொண்டே....சுதாவைப் பற்றி அம்மாவிடம் கேட்கலாமா...? என்று யோசனையில் இருந்தேன். என் எண்ணங்களை புரிந்து கொண்டாளோ என்னவோ அம்மாவே ஆரம்பித்தாள் "இந்த சுதாவைப் பாத்தியாடா...? அம்மா மாதிரியே பண்ணிட்டா...!" 

"என்னம்மா என்ன ஆச்சு...?" என்றேன்...! 

"பக்கத்து வீதியில ஒருத்தன் மளிகைக்கடை வச்சிருந்தான்... தூக்கநாயக்கன்பாளையத்துக்காரன் இவ சாமான் வாங்கப் போக பழக்கம் ஆயிடுச்சு போல ஒரு நாளு இவளைக் கூட்டிட்டுப் போயிட்டான். கடைசியில அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை வேற இருக்காம். அவங்க இவளை அடிச்சு உதைச்சு பங்களாப்புதூர் ஸ்டேசன்ல வச்சு கேஸ் குடுத்து! பஞ்சாயத்துப் பேசி இப்ப இருகுடியா வாழறா...! ரொம்ப சீரழியறா பாவம்...!" 

"இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட்டுக்க...."என்றாள் அம்மா...!

"வேணம்மா போதும்.....வயிறு சரியில்லை" என்றேன் 

"ரசம் இருக்குடா...."

"இல்லம்மா போதும் விடு....!"தட்டில் கைகழுவிவிட்டு எழுந்து நின்றேன்.

துண்டை எடுத்து நீட்டியவள்....."ம்ம்ம்.....நல்ல பொண்ணுடா அவ அம்மாவே கெடுத்துட்டா....."என்ற அம்மா கண்ணைத் துடைத்தாள்... அவளுக்காக அழுகின்றாளா என்ன...? மனசு ஒரு மாதிரியாக இருக்க வெளியில் கிளம்பினேன்.

Read more...

அன்புள்ள தெய்வ மச்சானுக்கு ஆசையில ஒரு கடுதாசி!

>> Monday, September 9, 2013

அன்புள்ள....

"மண்ணுளி" தெய்வ மச்சானுக்கு சிலோனிலிருந்து "ராசா"மச்சான் எழுதும் கடிதாசி. மச்சானுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்....மச்சான் நலமா..?அக்கா "சாணி"யின் நலத்தைக் கேட்டதாகச் சொல்லவும்....அப்படியே தங்கச்சி கொரங்காயி, தம்பி ராய்க்கூலு, சகலை ராகாட்டு ஆகியோர்களையும் கேட்டதாக சொல்லவும். இங்க நான் பகல்ல நொம்ப  சந்தோசமா இருக்கிறேன்...ராத்திரியிலதான் எங்காளுக கற்பழிச்ச டமிழ் பொம்பளை பேய்க ரவுசு பண்ணுது.....அதுக தொல்லைதான் கொஞ்சம் தாங்கல.....சீக்கிரம் ஒரு மளையாள ஷகிலாவை..ச்சே....ச்சீ நம்பூதிரியை அனுப்பி வைக்கவும்...ஒரு யாகம் நடத்தினால் சரியாகிவிடும். ஆனாலும் சந்தோசமாத்தேன் இருக்கேன்.....அதுக்கு சாட்சி நான் குடித்து விட்டு சிங்களத்திகளுடன் கும்மாளம் அடித்த ஊடூப் வீடியோவுக்கு ஆறு லைக் போட்ட அணு வெஞ்ஞானி நாரசாமிய கேட்டுப்பாருங்க.... போங்க மச்சான் வெக்கவெக்கமா வருது, செரீ அத வுடுங்க "தயிர்போண்டாத்தலையன்" கோஸ்டி, "எளகினஆயன் கோஸ்டி", "செட்ல டீ ஆறுது" கோஸ்டி  மற்றும் டமிழ்நாட்டு அல்லக்கை நொல்லக்கைகளுக்கு நன்றி கலந்த வணக்கத்த தெரிவிச்சிருங்க.

அப்புறம் மச்சான் ஒரு விசியம் கடலில் வரப்பு வைத்து உங்க ஆசியில் பூண்டு வெவசாயம் பண்ணிட்டு இருக்கோம். அதை அழிக்கறாப்ல டமிழ் மீனவன்கள் வந்து மீன் புடிக்கிறாங்க.....அது மட்டுமில்லாம அங்கியே வறுத்து வேற தின்னுட்டு... நசிக்கி நசிக்கி "குசு" வேற வுடறானுகோ. "வங்கநரி" வுடுறத விட பொண நாத்தம் அடிக்கி. கச்சத்தீவத்தான் அன்னிக்கே எங்களுக்கு தாரை வாத்திட்டீங்கள்ள அப்புறம் எதுக்கு இவனுக ரவுசு பண்றானுக...பிக்காளி பசங்க.....அடிச்சி முடுக்க சொன்னேன் நம்ம பசங்கள.... 

அவிங்களும் கட்டையில அடிக்கறாங்கோ, டுப்பாக்கிய திலுப்பி பொறத்தால நாலு வச்சாலும் டமிழு கருவாப் பயனுக தகீரியமா மறுக்கா...மறுக்கா வந்து மீனு, நண்டு புடிக்க வர்றாணுக...நாத்தம் புடிச்ச டமிழனை எங்களுக்கும் புடிக்காது ஒங்களுக்கும் பிடிக்காது அதனால நீங்களும் கண்டுக்க மாட்டிங்க....கேரளாக்காரனோ..? வடநாட்டுச் சேட்டோ அடிபட்டா மட்டும் உங்க உச்சானி முடி நட்டுக்கிட்டு நிக்க லங்கோட இறுக்கிக்கட்டிக்கிட்டு வீர வசனம் பேசுவீங்க..."இட்டாலியே டக்கால்டி வேணாம்" அப்படின்னு பஞ்ச் பேசி ரோசப்படுவீங்கோ எளைய தளவதி மாதிரி....!

இந்தியாவுல பொறந்த ஈனச்சாதி பயலுக டமிழனுக....அவங்களை அடிச்சா நீங்க டர்பனை எடுத்து வாய மூடிக்கிட்டு சிரிப்பீங்கோ! ஆனாலும் பாருங்க மச்சான்! தலைவர் பிரபாகரன் போட்டாவப் பாத்தா இன்னும் நம்ம பயலுக கழியறானுக. சுதேசி விமானம், நீர்மூழ்கி கப்பல், பீரங்கி  எல்லாம் தயார் பண்ணியிருக்கானுக, ஆனா நீங்க இன்னும் ரஷ்யாகிட்டயும்...இட்டாலிக்காரன் கிட்டியும் "அய்யா சாமி....! இல்லாதப்பட்டவன் வந்திருக்கிறேன்...... ஒரு பீரங்கி பிச்சை போடுங்க சாமீன்னு..!" பிச்சையெடுக்கிறீங்க மச்சான். டமிழன் மூளைக்காரன் ஆனா பாருங்க மச்சான் அவன் எல்லாத்தையும் நம்பிருவான்...அது மட்டுமில்லாம உங்க நெரந்தர அடிமை மஞ்சத்துண்டு சின்னமச்சான் ஈழம்...ஈழம்ன்னு இத்தனை நாளு ஈழமக்களையும் தமிழக கறுவாப்பயலுகளையும் நல்லா ஏமாத்தி நமக்கு விசுவாசமா இருககாரு... அவருக்கு ஒரு ஸ்பெசல் டேங்ஸ் சொல்லிருங்க பெரிய மச்சான்.

அப்புறம் மச்சான் இந்த கருவா டமிழ் மீனவப் பசங்களை வெறகு கட்டை, டுப்பாக்கியில அடிச்சும்...சுட்டும் நம்ம பசங்க கை வலிக்கி....கை வலிக்கி அப்புடின்னு அழுவாச்சியா அழுதாங்க மச்சான். அதை  உங்ககிட்ட சொன்ன மறுநிமிஷமே மனசு கலங்கி ரண்டு போர்க் கப்பலை பெரீய்ய...பெரீய்ய லென்சு டுப்பாக்கி வச்சு கருவா டமிழ் ஈன மீனவ பயலுகளை நல்லாச் சுட்டுக்கடா ராசான்னு அனுப்பினீங்க பாருங்கோ.......மண்ணு மச்சான் நீங்க எங்கியோ போயிட்டிங்க.....!ஒங்க அன்பு, பாசம், பரிவ கண்டு கண்ணுல தண்ணி....தண்ணியா ஊத்தி திரிகோணமலை உசரத்துக்கு கடல் மட்டம் ஏறிக்கிச்சுங்க மச்சான்......! மச்சான் நீங்க தெய்வ மச்சான்......மச்சான்....! அழுவாச்சி...அழுவாச்சியா வருது மச்சான் அதனால் இத்தோட நிறுத்திக்கிறேன் மச்சான்!


என்றும் உங்கள் எசமான்
ராசக்காடைராசய்யா!
கொழும்பு!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP