பேச்சிலர் வாழ்க்கை- ஒரு அய்யாச்சாமியின் டைரி!

>> Wednesday, July 31, 2013

ம்ம வாழ்க்கையில பேச்சிலர் வாழக்கைங்கறது ஒரு அழகான ஒரு கட்டம்ன்னு சொல்லுவாங்க....அந்த அழகான கட்டத்துல நல்ல நண்பர்கள் கெடைச்சுட்டா சந்தோஷம்தான். ஆனா அதுவே அராத்து புடிச்ச அப்பிரண்டிசு பசங்களா அமைஞ்சிட்டா நம்ம பாடு ரொம்ப கஸ்டமுங்க.....! எங்கூர்ல இருந்து திருப்பூர்க்கு வந்ததும் கொஞ்ச நாளு ஆபிஸ்ல தங்கி வேல பாத்தேன். அதுக்கப்பறம் நாலு பிரண்டு சேந்ததும் ஒரு ரூமு புடிச்சு தங்குனோம், அந்த காம்பவுண்டே ஒன்லி பேச்சிலர்தான், வழக்கமான பேச்சிலர் ரூம் போல பாலிவுட் ஊர்மிளா, மணிசா, கோலிவுட் நமீதா, ஹாலிவுட் கேட்வின்ஸ்லெட், ஏஞ்சிலினா ஜோன்ஸ் படங்கள் ஒட்டப்பட்டு, வண்ணத்திரை, போன்ற சினிமா புக்கும் மருதம் போன்ற சரோஜாதேவி வகையராவாகவும் இறைந்து கிடந்த அறையாகத்தான் இருந்தது. அந்த காம்பவுண்டில் உள்ள ரூம்ல ஒவ்வொருத்தனும் ஒரு ஊர்க்காரன் மதுர, திருச்சி, தஞ்சாவூரு, திருநெல்வேலின்னு பல ஊர்க்காரனுகளால நெறைஞ்சு இருக்கும் அதே மாதிரி ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு செய்கையில நம்ம உசிர எடுப்பானுக....அது மட்டுமில்லாம பக்கத்து ரூமு பக்கிக அதுக்கும் மேல சாவடிப்பானுக!
ஹேய் நில்லுய்யா.......மஞ்சசட்டை

ரூமுக்கு போயி மொத நாளு நல்ல மணக்குற பியர்ஸ் சோப்பு வாங்கி வச்சிருந்தேன். காலையில எந்திருச்சுப் பாக்குறேன் சோப்பக் காணம்...! எலி..கிலி...தூக்கிட்டுப் போயிருச்சான்னு தேடிப் பாக்குறேன் எங்கயும் காணல...சரின்னு பாத்ரூம் போனா சோப்பை ஒரு பன்னி எடுத்து தண்ணித் தொட்டிக்கிட்ட எடுத்து வச்சு தேய்ச்சு...தேய்ச்சு குளிச்சிட்டு இருக்கு அதுவும் ஜட்டிக்குள்ள வுட்டு பிளக்கு...பிளக்குன்னு நுரை வர தேச்சுக்கிட்டு இருக்கு கருமம் 

“அடேய்.....அடேய்.....இனி அந்த சோப்ப நான் எப்பர்ரா எம்பட மூஞ்சிக்குப் போடுவேன்....! ”

“மாப்புள பியர்ஸ் சோப்பு நல்லா மணக்குடா“ன்னு வேக்காணம் வேற பேசுறான் சங்கி மங்கி! அவன் குளிச்ச பிறகு அந்த சோப்பு செத்த எலி மாதிரி தூக்கியெறிஞ்சுட்டேன்.

அடுத்தது டூத்பேஸ்ட் நூறு கிராம் பேஸ்ட் வாங்கிவச்சேன் நல்ல குர்குரேய் பாக்கெட்டு மாதிரி உப்பலா இருந்துச்சு...! ஒரே மணி நேரத்துல சரக்கடிச்சுட்டுப் போட்ட சைட் டிஸ் ஊறுகா பாக்கெட்டு மாதிரி சப்பி வச்சுடுவானுக....“ஏண்டா பேஸ்டே வாங்க மாட்டிங்களா...? நானும் வாங்கலைன்னா என்னடா பண்ணுவீங்கன்னு..?” கேட்டா “பேஸ்ட்டு இல்லாதப்ப எதுக்கு பல்லு வௌக்குறோம்ப்பானுக....” இவணுககிட்ட பீர் பாட்டில மூடிய வாயில ஒடைச்சு வாங்கிக் குடிச்சத நெனைச்சா குடிக்காமியே வாந்தி வாந்தியா வருது கருமம். கருமம்..! ஒரு நாளு சோப்பாயில் வாங்கி காலியான டூத் பேஸ்ட்டுல ஊத்தி வச்சுட்டேன் அதையும் பிதுக்கி பல்லு வௌக்கி வாயக் கொப்புளிச்சு கலர் கலரா பப்புள்ஸ்...விடுறானுக....!

சின்ன டிவியிலதான்டா மாப்புள தெளிவா தெரியுது.

அப்புறம் பக்கத்து ரூமுக்காரனுக இருக்காங்களே....! அவங்க அதுக்கு மேல குளிப்பானுக அப்படியே பேசிட்டே வந்து பாராசூட் தேங்கெண்ணைய கை நெறைய ஊத்தி வௌக்கெண்ணை கூட பாக்காத தலை, உடம்பு எல்லாம் பூசிட்டு “தேங்காண்ணை தேச்சாத்தா நல்லா இருக்குலே அப்படிம்பாங்க...” “நன்னாரிப் பயலே காசு குடுத்து வாங்கி தேய்க்கணும்டா...!” அப்படிம்பேன் “விடுலே மக்கா...! சவம் இதுக்கு கணக்கு பாக்க.....”அப்படிம்பாங்க. டூத்ப் பேஸ்ட் மாதிரியே தேங்காண்ணையில பினாயில கலந்து வச்சுட்டேன் அதையும் தேய்ச்சுட்டு இன்னிக்கு நல்லா மணக்குதுங்கறானுக........வெறுத்துப் போயிட்டேன்.

இந்த சட்டை, பேண்ட் இருக்கே....அதுக்கு வாயிருந்தா கதறி அழும். காலையில நான் முழிக்கும் போதே நல்லா குளிச்சிட்டு அயரன் பண்ணி வச்ச சட்டைய போட்டுக்கிட்டு “எலே...எப்பர்ரா இருக்கு எனக்கு அப்படிம்பாங்க....” என்னடா மதுரக்கார இன்னிக்கு  கலக்குறானேன்னு பாத்தா பயபுள்ள நம்ம சட்டைய போட்டுக்கிட்டு இருப்பான் கரைட்டா நம்மை விட அடுத்தவனுக்கு செட்டாகற மாதிரியே சட்டை தெக்குற இந்த டெய்லர ஒதைக்கணும்ன்னு தேவையில்லாம நெனைப்பேன். சட்டயப் போட்டாக் கூட பரவாயில்ல அதுல பீடி குடிச்சு ஓட்ட பண்ணி வச்சிருவானுக...இல்ல சரக்கடிக்கப் போயி தக்காளி சாஸூ சிக்கன் பிஸூன்னு கறையாக்கிருவானுக கேட்டாக்கா “மாப்பு கர நல்லது அப்படிம்பானுக” அறை கூட நல்லதுதான்னு செவுட்டுல ஒண்ணு அறையலாம் போல இருக்கும்.
ஏண்டா சோப்பை பிளேடு மாதிரி ஆக்கி வச்சிருக்கிங்க.....நான் எங்க குளிக்கறது

ஊருக்குப் போயிட்டு வரும்போது எங்கம்மத்தா போட்டுர்ற நார்த்தங்கா ஊறுகா, அரிசி முறுக்க ஒரு வாரத்துல சரக்கடிக்க சைட் டிஸ்சா பயன்படுத்தி முடிச்சுருவானுக அதுவும் மப்புல ஊறுகாய வழிச்சு..வழிச்சு நக்கறதப் பாத்தா எனக்கு கடுப்பாயிரும்.

இதெல்லாம் விடுங்க புது ஜட்டியப் பாத்தா பொறையக் கண்ட நாய் மாதிரி கவ்விருவானுக....சில சமயம் நாம போட்டு கழட்டிய ஜட்டியக் கூடத் தெரியாம போடுற மாதிரி போட்டுக்குவாங்க அதுக்காக ஜட்டியில நம்ம பேரையாங்க அடிக்க முடியும்...?

அவனுக வாங்கற வண்ணத்திரை மாதிரி டைம்பாஸ் புத்தகங்களை பத்திரமா வச்சுக்குவானுக நாம வாங்குற இலக்கிய புத்தகங்களை படிக்கறேங்கற பேர்ல எடுத்துட்டுப் போயி பிலிம் காட்டுவானுக கொஞ்சம் படிச்சு பாப்பாங்க புரியலைன்னா கடுப்பாயி டீகடையில எடைக்குப் போட்டுட்டு போண்டா வாங்கி தின்னுடுவானுக.... கரைக்ட்டா நாம கடைக்குப் போயி போண்டா வாங்கும் போது சாருவோ, ஜெயமோகனோ நான் திங்கற போண்டா பேப்பர்ல எண்ணைப் பிசுக்கோட பரிதாபமா சிரிச்சிட்டு இருப்பாங்க....! 

“ஏம்ப்பா ஒரு பெட்டி போட்டு பூச்சி வச்சிருக்கலாமில்ல அப்படின்னு நீங்க கேட்குறீங்க....!”

உக்கும்...அந்தக் கதைய சொல்றன் கேளுங்க....

அதையும் செஞ்சு பாத்தனே! ஒரு பெட்டி போட்டு பூட்டி வச்சேனே! அதையும் கள்ளச்சாவி.....கள்ளச்சாவி எங்க பின்னூசி, ஆணி வச்சு அழகா திறந்துடுவானுக கடைசிக்கு எதுவும் கிடைக்கலைன்னா பல்லாலியே கடிச்சு துப்பிருவானுக கிரிமினல் பசங்க.....சார் இவனுக...!

கருமம் புடிச்சவனே ஜட்டிய தொவைச்சுத் தொலை....
நல்லா தூங்கிட்டு இருப்பேன் கனவுல நமீதா ஸ்முவிங் டிரஸ்ல (சில சமயம் டிரஸ் இல்லாம....துண்ட மட்டும் கட்டிக்கிட்டு) வந்து  வந்து உதட்டைக் குவிச்சு என்ற உதட்டை லிப்லாக் பண்ண வருவா சரியா அவ ஒதட்டுக்கும் எம்பட ஒதட்டுக்கும் .5MM இருக்கும் போது படுபாவி பசங்க சரியா மூஞ்சியில தண்ணியத் தெளிச்சு எந்திர்ரா அப்படின்னு எழுப்பி விடுவாணுக “மொதோ ராத்திரியன்னிக்கு பக்கவாதம் வரணுமடா ஒங்களுக்கு”ன்னு சாபம் உட்டுட்டே எந்திரிப்பேன்! ஆனா சரக்கு, சைட் டிஸ்ஸூ புரோட்டா, சிக்கன்னு வாங்கிட்டு வந்து சாப்பிர்ரா...சாப்பிர்ரான்னு பாசத்தை பொழிவானுக போதையில....சாபத்தை வாபஸ் வாங்கிட்டு சாப்புடுவேன் ஆனா ஒண்ணுங்க நம்மள இப்படியெல்லாம் இம்சை பண்ணினாலும் இந்த பேச்சிலர் பசங்க நமக்கு காச்சல் தலவலின்னா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறதைலியும் செரி...! எதாவது பிரச்சனைன்னா லுங்கிய தூக்கிக்கட்டிட்டு சவுண்டு குடுக்கறதிலியும் செரி இவங்கள மிஞ்ச ஆளே கெடையாது பிரச்சனை பெரிய எடம்ன்னா எஸ்கேப்பாயிருவானுக அத விடுங்க ஆனா பாசக்காரப் பசங்கய்யா.....பாசக்காரப் பசங்க.....சாவுற வரைக்கும் மறக்க முடியாத ஒரு லைப்பு பேச்சிலர் லைப்புதானுங்க என்னங்கண்ணா நாஞ்சொல்றது...!

Read more...

கஞ்சா-சில குறிப்புகள்!

>> Tuesday, July 30, 2013

ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' இசை கலைஞரான ''பாப்மார்லி'' தனது இசை எழுச்சிக்கு "கஞ்சா" பெரிதும் உதவுவதாக நம்பினார். போதையின் உச்சத்தில் நரம்புகளை மீட்டும் பல பாடல்களைப் பாடி ஆண் பெண் யுவதிகளை பேயாட்டம் ஆட வைத்த மாபெரும் கலைஞன் 38 வயதில் மரணமடைந்தற்கு கஞ்சா ஒரு காரணமாக ஆயிற்று. 

பாப்மார்லி


இப்படிப்பட்ட கஞ்சாவைப் பற்றி எழுதுவதற்கு அதுவும் வலைத்தளத்தில் இதுவரை யாரும் எழுதியதில்லை. கஞ்சாவைப் பற்றிய செய்தியில் ஒன்று சங்க இலக்கியப் பாடல்களில் பண்டைய தமிழச்சிகள் மணம்மிகுந்த கஞ்சா செடியின் பூவைக் கூந்தலில் சூடிக் கொண்டதாக ஒரு தகவலும் உண்டு! அதற்கான தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை. குடி, சிகரட் போன்றவற்றை பற்றி எவ்வித கூச்சமும் இன்றி எழுதுகின்ற யாரும் அகோரிகளால் சிவபாணம் என்று அழைக்கும் கஞ்சாவைப் பற்றி எழுதியதில்லை. நான் இந்தக் கட்டுரை எழுதவேண்டும் என்று முடிவெடுத்த பிறகு ஒரு வலைதள நண்பரிடம் இதைப் பற்றி பகிர்ந்த போது தானும் கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை புகைத்துப் பார்த்த அனுபவத்தைக் கூறினார். அது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் போன்றே இருந்தது.

இதை அதிகம் குடிப்பவர்களுக்கு கல்லீரல், கணையத்தில் நீர் கோர்த்துக் கொள்ளும், நோய் முற்றிய நிலையில் மரணம்தான் விடுதலை. சிலருக்கு மூளை பாதிப்படைந்து மனநிலை பிறழ்வடைந்து சட்டையை கிழித்துக் கொண்டு தானாக பேசிக் கொண்டு திரிவார்கள். ஆனாலும் இது ஒரு ராஜபோதை என்பதில் போதைப் பிரியர்களின் கூற்று.



நான் திருப்பூர் வந்த பொழுது “கஜலக்ஷ்மி” தியேட்டர் ஒட்டிய பகுதி முற்காடாக இருந்தது. பொரும்பாலான சமூக விரேதிகளின் கூடாரமாகவும், “அரவாணி”கள் “பாலானத் தொழில்” மேற்கொள்ளும் இடமாகவும் இருந்தது. அங்கே தாரளமாக “கஞ்சா” விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. இன்று அந்த இடத்தை சுத்தம் செய்து சாலையும் போடப்பட்டு விட்டது.

நான் தங்கியிருந்த கட்டிடத்தின் வாட்ச்மேன் ஒரு “கஞ்சாக்குடிக்கி”. உசிலம்பட்டியைச் சேர்ந்தவன் வயது ஐம்பது இருக்கும். இரவு முழுவதும் கஞ்சா புகைத்துக் கொண்டேயிருப்பான், நான் தூக்கம் வராத இரவுகளில் அவனுடன் எதாவது பேசிக்கொண்டிருப்பேன். எங்க ஊர்ல மலைப்பகுதியில் “கடம்ப“ இன பழங்குடி மக்கள் வாழுகின்றார்கள். இவர்கள் நாட்டுப்பகுதிக்கு மூங்கில், தானியங்களை விற்பதற்காக கொண்டு வருவார்கள், அப்படி குழுவாக வருபவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து ராகிக் களி கிண்டி அதற்கு தொட்டுக்க காரமாக ஒரு தொக்கு செய்வார்கள். பச்சை மிளகாய், புளி, உப்பு போட்டு அரைகுறையாக நசுக்கி செமக் காரமாக இருக்கும் நன்றாக உண்டு விட்டு, எருக்கலையில் கூம்பு மாதிரி சுருட்டி, அதில் கஞ்சா நிரப்பி, வரிசையாக கையை மடித்து; விரல்களில் சொருகி; ஆழமாக இழுப்பார்கள்..... அந்த இடமே கஞ்சாப்புகையால் நிரம்பி சுவாசிக்கும் நமக்கும் போதையேற்றும். நமது நாட்டு ஆட்கள் கஞ்சா அடிமையாக மாறிய பிறகு பைத்தியமாக திரிந்து சீக்கிரம் செத்துப் போவார்கள், ஆனால் அவர்களை அது எந்த விதப் பாதிப்பும் ஏற்படுத்தாது! 102 வயது வரை உறுதியாக இருப்பார்கள். எங்க ஊர் ஆட்களில் ஏராளமான நபர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மரணத்தைத் தழுவியதால் இதன் மேல் எனக்கு ஒரு பிரியமோ, ஆசையோ எப்பொழுதும் கிடையாது! ஆனாலும் அன்று ஏனோ குடித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் உண்டானது.
 
கஞ்சா பயிர்

நான் அவனிடம் ஒரு சிகரட்டைக் கொடுத்து கஞ்சா போட்டு தரச்சொன்னேன். முதலில் மறுத்தவன் என் வற்புறுத்தலால் போட்டுக் கொடுத்தான், கொடுத்த போதேச் சொன்னான் “சாமீ இது மோசமான கழுதை! எதை நினைக்கறமோ அதுவே திரும்ப…திரும்ப போதை தெளியும் வரை நெனைப்புல வந்துட்டே இருக்கும் அதனால மனச சுத்தமா வச்சிட்டு குடிங்க” என்றான்.

முழு சிகரட்டையும் இழுத்து முடித்தவுடன்... மெல்ல இரத்தத்தில் கஞ்சா ஊடுருவ ஆரம்பித்தது... கிர்ர்ர்ர்ரென்று மூளையை கிறுகிறுக்க வைத்தது.... பாரதிராஜா பட வெள்ளைத் தேவதைகள் பறக்க ஆரம்பித்தார்கள்... சிரிப்பு…சிரிப்பு….நிறுத்தவே முடியாத ஒரு தொடர்ச் சிரிப்பு... காரணமேயில்லாத சிரிப்பு.... மேகமாக மாறிப் பறக்க ஆரம்பித்தேன். எந்த வாகனமும் இல்லாமல் தேசாந்திரியாக உலகை வலம் வந்தேன், பசி……பயங்கரப் பசி வாழ்நாளில் இப்படியொரு பசி நான் அனுபவத்ததேயில்லை....! நாக்கு மரத்துப் போன மாதிரியிருக்கின்றது. வழக்கமாக சாப்பிடும் அளவை விட ஆறு மடங்கு உண்டேன். தண்ணீர் தாகம் இந்த பிரபஞ்சத்தின் முழுத் தண்ணீரையும் உறிஞ்சிக் குடித்து விடுவேனோ...! என்கின்ற அச்சமேற்ப்பட்டது. மனம் லேசாக துடைத்து வைத்த மாதிரி இருந்தது தத்துவங்கள் தானாகவே என் வாயிலிருந்து பொழிந்தன சிரிப்பு…சிரிப்பு…என் ஆயுளின் முழுச் சிரிப்பையும் சிரிக்க முற்பட்டேன்... விடியும் வரை சுற்றியலைந்து விட்டு அதிகாலையில் படுத்தவன் அடுத்த நாள்தான் விழித்தேன்.

அந்த வாரம் முழுவதும் ஒரு மயக்கநிலையில் இருந்தேன். வாழ்நாளில் இனி இதைத் தொடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இதுவரை தொடவில்லை. காசியில் சுற்றியலையும் அகோரிகளும், எங்க ஊர் கடம்ப இன மக்களையும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத கஞ்சா நம்மைப் போன்றவர்களை ஏன் இப்படிப் செய்கின்றது ராஜபோதை என்பது சிலருக்கு மட்டும்தானா…? சிவபாணம் என்பதால் சிவனின் அனுக்கிரகம் இருப்பவர்களுக்கு மட்டும்தானா…? என்கின்ற கேள்விகள் இந்த இப்புவியில் அறியப்படாத பல ரகசியங்களில் ஒன்றாகவே இருக்கின்றது.

படங்கள் : கூகுள் தேடல்


Read more...

எட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......!

>> Thursday, July 11, 2013


சில நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் எப்பொழுதும் இருக்கின்றது, “சரோஜா” வேறு தீப்பிடித்த காயங்களோடு கருகிய வாசனையுடன் வருகின்றாள் இது எதாவது பில்லி சூனியமா...? இவளுகளை இந்தாளு எப்படிய்யா சாமாளிக்குறாரு...என்கின்ற கேள்வி சில நாட்களாக என் மனதை குடைந்து கொண்டேயிருக்கின்றது.

பாலியல் கதைகளைப் பொறுத்தவரை விந்து வருவதற்கு முன்னிருந்தே ஒரு ஆணிற்கு அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பெரிசுகள் சிலேடையாகவும், அண்ணன்மார்கள் கிணறு, குட்டையில் உக்கார்ந்து உண்மையும், புனைவும் கலந்து கூறிவந்த கதைகள், ஒரு கிளர்ச்சியும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. வாமு கோமுவின் பல கதைகள் திருப்பூரின் மாவட்டத்தை சார்ந்த பாலியல் பிரச்சனைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன என்று நான் நினைக்கின்றேன். அதில் பல பாத்திரங்கள் நாம் கேள்விப்பட்டவைகளாகவும், பழகியவைகளாகவும் இருப்பதும், மிக நுட்பமான பார்வையில் படைப்புகளை படைக்கும் பாங்கும், கொங்கு வட்டார வழக்கை எந்த சமயத்திலும் அனாயசமாக எழுத்துகளில் புகுத்தும் நுட்பம் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றேன். அந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இரவுவானம் சுரேஷ்க்கு நீண்டநாட்களாக இருக்கின்றது. 

அதனால் கிளம்பிப் போனோம் வாய்ப்பாடி கிராமத்தை நோக்கி விஜயமங்கலம் இரயில் நிலையம் ஒட்டியபடியே வீடு,நாவல்களில் வர்ணிப்பதைப் போன்ற ஒரு அழகான கிராமம்! கிராமத்து மனிதராக எங்களை அன்போட வரவேற்றார், பல விசயங்களைப் பேசினார் ஒரு மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை, நாங்கள் ஹென்றி ஷாரியர் எழுதிய 'பட்டாம்பூச்சி' பிரஞ்சு நாவல் தமிழ் மொழி பெயர்ப்பு ரா.கி.ரங்கராஜன் நர்மதா பதிப்பு வெளியிட்டிருந்தது அதை வாங்கிகொண்டு சென்றோம் இது குமுதத்தில் தொடராக வந்தது.அவருடைய “கள்ளி” கிடைக்கவில்லை அதனால் “மங்கலத்து தேவதைகள்” வாங்கினேன்! ஏற்கனவே வாங்கி நான் படிக்காமலே ஒரு நண்பன் வாங்கிச்சென்றது திரும்பி வரவில்லை அதனால் மீண்டும் வாங்கினேன். அன்போட என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் வார்த்தைகளில் மட்டுமல்ல.... கொங்கு மண்ணுக்குறிய அன்பு நிறைய அந்த மனிதரிடம் இருந்தது, பழகுவதற்கு இனிமையான நல்ல எளிமையான மனிதர்.

வாமு கோமுவின் வலைத்தளம் : http://vaamukomu.blogspot.in/

வாமு கோமுவின் முகநூல் : https://www.facebook.com/vaamukomu?fref=ts

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP